Saturday, March 17, 2018

சொந்த பந்தம்.

சொந்தபந்தம் என்பது இறைவன் இவ்வுலக வாழ்வில் நமக்கு வழங்கிய பெரும்பாக்கியமாகும். மனித வாழ்வில் மிக அவசியமான நம்முடன் பின்னிப் பிணைந்து சங்கிலித் தொடராய் வந்து கொண்டிருக்கும் உறவாகும்.நம் பிறவி தந்தை என்ற உறவின் மூலமாக தாய் என்ற உறவை தாங்கிப் பிடித்துக் கொண்டுதான் இவ்வுலகை கண்டோம். மனிதர்கள் இவ்வுலகில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து தனது வாழ்வு முடியும் வரை ஏதாவது ஒருவகை சொந்த  பந்தங்களை சார்ந்தே வாழ்ந்து வருகின்றனர். அதுவே உலக நியதி.


அதன் தொடர்ச்சியாக பிறகு அண்ணன்,தம்பி,அக்கா,தங்கை, மாமன், மச்சான், என்று இன்னும் ஏராளமான  பல உறவுமுறைகளை பெற்று இவ்வுலக வாழ்க்கையை ஆரம்பிக்கிறோம்.

எத்தனை கோடிக்கு அதிபதியாக இருந்தாலும் மலைபோல் செல்வம் குமிந்து கிடந்தாலும் இப்படி ஒரு சொந்தபந்த உறவுகள் இல்லாமல் போய்விட்டால் இவ்வுலக வாழ்க்கையில் சந்தோஷமோ, மகிழ்வோ, சுகமோ,மனநிம்மதியோ இருக்காது. அது ஒரு வாழ்க்கையாகவே தெரியாது. நடுத்தர குடும்பமாக இருந்தாலும் நாலு உறவு முறைகளைக் கொண்டவர்களிடம் இருக்கும் சந்தோஷமும் மகிழ்வும் தைரியமும் ஆதரவும் அரவணைப்பும் கோடிக் கோடியாய் கொடுத்தாலும் கிடைக்காது. இன்னும் சொல்லப்  போனால்  எத்தனை கோடிரூபாய் கொடுத்தாலும் இயற்கையாக அமையும் இத்தகைய சொந்தபந்தங்களை விலைகொடுத்து வாங்க முடியாது.

இப்படி இயற்கையாக இப்புவியில் இறைவன் நமக்கு ஏற்படுத்தித் தந்த நமது சொந்தபந்தங்களை உறவுமுறைகளை சிலர் அற்ப பிரச்சனைகளுக்காகவும் சின்னஞ்சிறு மனஸ்தாபங்களுக்காகவும் பிரிந்து போகிறார்கள்.எதிரியாக்கிக்  கொள்கிறார்கள்.சொந்த பந்தங்களை இழந்து நிற்கிறார்கள். இது நம் வாழ்க்கைக்கு எந்த விதத்திலும் நிம்மதியை கொடுக்காது.இது நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளும் மிகப்பெரிய இழப்பாகும்.

இத்தனை சொந்தபந்தங்களுடன் பிறந்து வளர்ந்து ஒரு கட்டத்தில் தனிமைப்பட்டு போவது நம் வாழ்நாள் முழுதும் மனதளவில் அனுபவிக்கும்  மிகப்பெரிய வேதனையாகும்.இன்னும் சொல்லப் போனால் சொந்தபந்தங்களுடன் சுமூக உறவில் இருக்கும் போது ஏற்படும் சந்தோஷமும் செழிப்பும் மகிழ்வும் எத்தனைதான் சொத்துசுகம் இருந்தாலும் கிடைக்காது என்பதே உண்மையாகும்.

ஆகவே இவ்வுலக வாழ்வில் ஒருமுறையே நமக்கு வந்து  விட்டுப் போகும் நமது உறவுமுறைகளை சொந்தபந்தங்களை தக்கவைத்து  அரவணைத்துக் கொண்டு இவ்வுலக வாழ்க்கையை செழிப்புடனும் நிம்மதியுடனும் மகிழ்வுடனும் வாழ்ந்து விட்டு இவ்வுலகிலிருந்து விடைபெறுவோமாக.!!!
     
                                                               அதிரை மெய்சா 
                                           

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.