Thursday, March 1, 2018

என்னமோ நடக்குது மர்மமா இருக்குது.!!!

நாம் ஒவ்வொரு மனிதனும் இப்புவியில்தான் பிறந்து வளர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இப்புவியில் சிலர் ஏழைக் குடும்பத்தில் பிறந்திருப்பர். சிலர் நடுத்தர குடும்பத்தில் பிறந்திருப்பர். இன்னும் சிலர் பெரும் செல்வந்தர் குடும்பத்தில் பிறந்திருப்பர். பிறவி எப்படி இருந்தாலும் அவரவர் வசதி வாய்ப்புக்குத் தகுந்தவாறு தன் தேவைகளை பூர்த்தி செய்துகொண்டு வாழ்க்கையை அமைத்துக் கொண்டு அவரவர் தரப்பில் மகிழ்வோடு தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.இதில் யாதொரு சந்தேகமும் இல்லை.


ஆனால் இம்மனிதன் காலப்போக்கில் அவனது செயல் அவனது வாழ்க்கை முறை வசதி வாய்ப்பு செய்யும் தொழில் இவற்றின் அடிப்படையில் வேற்றுமை ஏற்ற தாழ்வு கண்டு பிளவு பட்டுப் போய் விட்டான்.இப்படி ஏற்பட்ட விரிசலால் தான் இன்றைக்கு அரசியலாகட்டும்,ஆன்மீகமாகட்டும் யாவற்றிலும்  உண்மை நேர்மை இல்லாமல்  இன்று மனித குலம் அழிவுப்பாதையில் பயணித்துக் கொண்டு இருக்கிறது.

இதற்க்கு இன்றைய காலகட்டத்தில் இவ்வுலகில் நடந்து கொண்டிருக்கும் மனித நேயமற்ற பல சம்பவங்களே சாட்சியாக இருக்கின்றது. ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டும் இரக்கமில்லா அரக்கனாக கொலைப் பாதகங்கள் செய்து கொண்டும்  ஒருவருக்கொருவர் நஷ்டத்தை ஏற்படுத்திக் கொண்டும் உண்மை நேர்மையை எல்லாம் குழிதோண்டி புதைத்துக் கொண்டும் இப்படியான செயல்கள் செய்து மனித குலத்தை மடிய வைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இவ்வுலக வாழ்க்கை அற்பமானது.நிலையில்லாதது. எதை கணித்துச் சொன்னாலும்  எந்த நேரத்தில் யார் மரணிப்பார்கள் என்று யாரும் கணித்துச் சொல்ல முடியாது. இந்த சொற்ப வாழ்க்கைக்குத்தான் இம்மனித இனத்திற்குள் இவ்வளவு போராட்டமா.? இதையெல்லாம் ஒவ்வொரு மனிதனும் சற்று சிந்தித்துப் பார்த்தாலே போதும்.மனிதம் தழைத்து நிற்கும். இவ்வுலகில் நாம் வாழும்வரை ஒருவரை ஒருவர் புரிதலுடன் பரிவுடன் இரக்கமுடன் அன்புடன் நேசத்துடன் விட்டுக் கொடுக்கும்  மனப்பாங்குடன் வாழ்ந்தோமேயானால் வறுமையும், பேராபத்துக்களும்,  குழப்பங்களும் நீங்கி மீதமிருக்கும் காலம்வரை நலமுடனும் மகிழ்வுடனும் வாழ்ந்து நம் சன்னதிகளும் மகிழ்வுடன் வாழ வழிசெய்து வைத்துவிட்டு நாம் சந்தோசத்துடன் இவ்வுலகிலிருந்து விடை பெறலாம்.

                                                            அதிரை மெய்சா
 


No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.