Saturday, August 1, 2015

பாட்டுச் சப்தம் இங்கே ! கிராமஃபோன் பெட்டி & இசைத்தட்டு எங்கே !?[ ஒரு நினைவூட்டல் ]

இவ்வுலக வாழ்வில் பாட்டையும் இசையையும் முணுமுணுக்காத வாய்களே இருக்கமுடியாது என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு பாட்டும் இசையும் மனிதனுடன் ஒன்றறக்கலந்து விட்டன. இதற்க்கு மூலகாரணமாக நமக்குத் தெரிந்தவகையில் கிராமபோன் எனும் இசைப் பெட்டியும் ரிக்கார்டு தட்டுக்களும் தான் முதன் முதலில் அறிமுகமானது.


ரிக்கார்டு தட்டு எனும் இசைத்தட்டு வட்டவடிவிலான கறுப்பு நிறத்தில் அளவில் சற்று பெரிதாக இருக்கும். அதை கிராமஃபோன்[gramophone] எனும் இசைப்பெட்டியில் சுழலவிட்டு ஒலிபெருக்கிவழியாக கேட்டு வந்தோம்.அந்த காலகட்டத்தில் பாட்டுச் சப்தத்தை கேட்டாலே மனதினில் ஒருவித மகிழ்ச்சியுடன் கூடிய ஆனந்தமாக இருக்கும். அன்றைய தத்துவப் பாடல்களும் கொச்சை வார்த்தைகள் கலப்படமில்லாத நல்லதமிழ் உச்சரிப்புப் பாடல்களும் பக்திப் பாடல்களும் நாகரீகமாக கேட்கும்படி இருந்தது.

அக்காலகட்டத்தில் திருமணம் மற்றும் பொதுக்கூட்டங்கள் ஏனைய விழாக்களுக்கு இந்த கிராமபோன் ரிக்கார்டுத் தட்டுக்களின் மூலம் தான் பாட்டொலிச் சப்தம் கேட்கும்.அதுபோல எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் பாட்டொலிச் சப்தம்தான் முதன்மையாக ஒலிக்கும். எங்காவது பாட்டுச் சப்தம் கேட்டால் ஏதாவது நிகழ்ச்சியோ பொதுக்கூட்டமோ நடக்கவிருப்பதை பொது மக்கள் அறிந்து கொள்வார்கள்.அந்த அளவுக்கு பாட்டொலிச்சப்தம் முக்கியத்துவம் பெற்று இருந்தது.

அதன்பின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நவீனங்கள் வளரத்தொடங்கி ஒலி நாடாவில் ஆன கேசட் உருவானது. அத்தோடு VHS எனும் காணொளி வீடியோ டேப்பும் அறிமுகமாகியது கேசட்டின் பாட்டொலிச் சப்தத்தைக் கேட்க டேப் ரிக்கார்டரும் படம் பார்ப்பதற்கென வீடியோ பிளேயரும் அறிமுகமானது. இந்த டேப் ரிக்கார்டு மக்கள் மத்தியில் அன்று நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தன..டேப்ரிக்கார்டு இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அனைவரது வீட்டையும் ஆக்கிரமித்து கொண்டு இருந்தது.குறிப்பாக அயல் நாட்டிலிருந்து தாயகம் வரும் அனைவர்களும் எதை மறந்தாலும் டேப் ரிக்கார்டை மறக்காமல் வாங்கி வருவார்கள்.பல பிரபலமான கம்பெனிகளும் ஒன்லி கேசட் பிளேயர்,டபுள் கேசட் பிளேர், ஸ்டீரியோ பிளேர், வாக்மேன் என புதுப்புது மாடல்களை அறிமுகப்படுத்தியதால் விற்ப்பனையிலும் பெரிய சாதனையை படைத்தது.அந்த அளவுக்கு டேப்ரிக்கார்டின் மோகம் அதிகமாக இருந்த காலம் அது..

அதன்பின் காலப்போக்கில் நாகரீகம் வளரவளர விஞ்ஞானமும் வளர்ந்து நவீனங்கள் மேலும் தலைதூக்கி அடுத்தடுத்த கண்டுபிடிப்புகளாக அப்பளம்போன்று மெல்லிய சிறிய அளவிலான CD,VCD,DVD,MP3,MP4,3D,BLUE RAY என உருவெடுத்தன. இந்த சிடிக்கள் அறிமுகமாகியதும் ஒலிநாடாவிலான கேசட்டுக்களின் மவுசு குறையத்தொடங்கின..மக்களின் மோகம் சிடிக்குத்தாவின.அதன்பின் இந்த சிடிக்களே வெகுகாலமாக தன்னை தக்கவைத்துக் கொண்டு இருந்தது.

இதன் காலக்கெடுவும் முடிவுறும் வகையில் இன்னும் அளவில் சிறிதாக தற்போது USB,MEMORYCARD என்று சுண்டுவிரல் அளவுக்கு சுருங்கி சிறிதாக இப்போது புழக்கத்தில் உள்ளன. இதை இன்டர்நெட்டில் பதிவிரக்கம் [download] செய்து நூற்றுக்கணக்கான பாடல்களையும் இசைகளையும் சேகரித்துவைத்து பாடல் இசைகளை கேட்க நினைக்கும் போதெல்லாம் இலகுவாக கேட்கும்படி ஆகிவிட்டது.. இதை உபயோகிக்க கணினி , லேப்டாப், செல்போன்,டேப்லெட்,ஐ பேட் என தற்போது வலம்வந்து கொண்டிருக்கின்றது.

ஒருகாலத்தில் இசையையும்,பாட்டையும் கேட்க சுமார் 7 , 8கிலோ எடைகொண்ட இசைத் தட்டுப் பெட்டியின் மூலம் கேட்டது போக இன்று சுமார் 80கிராம் எடை கொண்ட செல்போனிலும் டேப்லெட்டிலும், கேட்கும்படி நவீனம் வானுயர வளர்ந்து விட்டது

பாட்டோலிச் சப்தம் நவீனத்தின்பால் போன பிறகு பக்திப்பாடல் மெட்டுக்களெல்லாrம் இன்று குத்துப்பாட்டுக்களாகி விட்டன. ஆக கிராமஃபோனில் தொடங்கிய பாட்டொலிச் சப்தம் நவீன சாதனங்கள் வருகைக்குப்பின் கலாச்சார சீரழிவுப் பாதையில் பயணிக்கத் தொடங்கி விட்டன. இனி வரும் காலங்களில் இன்னும் எத்தனை புதுமைகள் வந்து ஆட்டுவிக்கப் போகிறதோ.!?!?!?

எதுஎப்படியோ தொடக்கத்தில் இசையையும்,பாட்டையும் கேட்க உதவிய கிராமஃபோனும், இசைத்தட்டும் இனி காட்சிப் பொருளாகத்தான் அருங்காட்சியகத்தில் பார்க்கமுடியும் போலிருக்கிறது.


அதிரை மெய்சா

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.